மார்ச் 5-March5
(05-மார்ச்)
*கங்குபாய் ஹங்கல்*
தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார்.
இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட அவரது தாய், இந்துஸ்தானி மேதை கிருஷ்ணாச்சார்யாவிடம் இசை கற்க ஏற்பாடு செய்தார்.
ஆரம்பக்கல்வி மட்டுமே கற்ற இவர், தத்தோபன்ட் தேசாய், சவாய் கந்தர்வா உள்ளிட்ட ஜாம்பவான்களிடம் இசை கற்று சிறந்த இசைக்கலைஞர் எனப் போற்றப்பட்டார். பல நகரங்களில் இந்துஸ்தானி இசைக் கச்சேரிகள் நிகழ்த்தி, நாடு முழுவதும் இவரது புகழ் பரவியது.

70 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த இவரது இசைப் பங்களிப்பிற்காக 1962ஆம் ஆண்டு கர்நாடக சங்கீத் நிருத்யா அகாடமி விருது பெற்றார். பத்ம பூஷண், பத்ம விபூஷண், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றார்.
பெண்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்த காலக்கட்டத்தில், தான் சிறந்த பாடகியாக வரவேண்டும் என்ற வைராக்கியத்துடனும், பல தடைகளை எதிர்த்து கடுமையாகப் போராடி வெற்றி பெற்ற கங்குபாய் ஹங்கல் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.