top of page

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்-Actor Shivaji Ganesan

#Mylife #Guru #Rolemodel #Oct1 #ShivajiGanesan இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்... என் பாக்கியம் அனைத்தும் நேரில் பக்கத்திலிருந்து பார்த்தமை- அந்த மிடுக்கு நடை, நேர் பார்வை, அசாத்தியமான திறமைகள்,எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல் தான்...

பூட்டானர் நடிப்பாற்றல்! நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்தவர்..


அவருடன் ஏற்பட்ட மரியாதை,பண்பு தான் என் வாழ்க்கையை இன்றும் ஒளிமயமாக ஏற்றிக் கொண்டு இருக்கிறது. பணம் என்னடா பணம் பணம், குணம் தானடா நிரந்தரம்...! இன்று அக்டோபர் 1ந்தேதி செவாலியே நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் ..! சினிமாவிலும் சரி...! வாழ்க்கையிலும் சரி...! யாராவது கொஞ்சம் நடித்துவிட்டால்...! ‘பெரிய சிவாஜிகணேசன்னு நெனைப்பு’ என்றுதான் சொல்லுவார்கள்...! சொல்லுவோம். சிறுவயதில் விடுமுறை காலத்தில் வேலூர் செல்வோம்..எங்கள் அத்தையின் நேஷனல் தியேட்டரில் 'பராசக்தி' படம் பிரவேசிக்க அன்று மீண்டும் கண்டேன் ஐயா அவர்களை.. மனதில் படிந்த ஐயா அவர்களின் உடை, ஒப்பனை போன்றவைற்றை இன்றும் கண் மூடி யோசித்தால் அப்பப்பா!! ஞாபக அலைகள்....


நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, காவல்துறை அதிகாரியோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்தவர். ஐயா அவர்களின் நடிப்புக்கு எந்த படத்தை சொல்ல, எதை விட? எல்லாமே முத்துக்கள்தான்.. எல்லாமே வைரங்கள்தான்.. எல்லாமே மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள்தான்.. தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லும். அவர் வாய்திறந்து பேசவே தேவையில்லை... கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும். அவரது நடை ஒன்று போதுமே.. 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் தாங்கி தாங்கி நடப்பதாகட்டும் திருவிளையாடலில் மீனவ வேடமாகட்டும்.. 'திருவருட்செல்வர்' படத்தில் பழுத்த சிவனடியாராகட்டும்.. ஒவ்வொரு நடையிலும் அவரது தன்னம்பிக்கை தான் என்னை வியப்பூட்டுகிறது இன்றும்.. ஒவ்வொரு பொங்கல் விழாவிற்கு அனைவரும் ஒன்று கூடி விழாவை இராய வேலூரில் பெருமாள் தாத்தா வீட்டில் சந்திப்பார்..இன்றும் அவருடைய நாற்காலி அவர் பெயர்,புகழ் பேசும் நினைவுலைகளாய்... கடைசியாக அவள்‌விகடன் புத்தகத்திற்கு ஒரு குடும்பப் படம் எடுத்தோம்.. கலை உலகத்திற்கு தமிழன்னை பெற்றுத்தந்த தவப்புதல்வன்தான் ஐயா..அனைத்துவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர் எங்களைப் பார்த்தவுடன் வா மா,சாப்பிட்டியா? இந்தா அந்த பேனாவை எடு என்று கேட்கும் குரல்.. சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொன்னவர்கள் கூட, நடிப்புக்கான முகவரியாக, நடிப்பின் கூகுளாக, நடிப்பின் டிக்‌ஷனரியாக சிவாஜியைத்தான் உதாரணம் சொல்லுவார்கள்...! சிகரம், இமயம், திலகம் என்று எதைச் சொன்னாலும் கட்டுக்குள் வராத பிரமாண்ட நாயகன் சிவாஜிகணேசன். கிட்டப்பாக்கள், சின்னப்பாக்கள், பாகவதர்கள் எனும் காலத்துக்குப் பிறகு, ஒரு நடிகருக்கு முதல் தேவை உடல்மொழி என்கிற பாடிலாங்வேஜ் என்பதை, படத்துக்குப் படம், காட்சிக்குக் காட்சி நிரூபித்து உணர்த்திய உன்னதக் கலைஞன் சிவாஜி என்பதை வரலாறு சொல்கிறது. போடாத வேஷமில்லை. ஏழை, பணக்காரன், காதலன், கணவன், ராஜா, மந்திரி, புலவர், அப்பாவி என்று சாதாரணமாகப் பட்டியலிட்டுவிடமுடியாது. ஏழை என்றால் எதுமாதிரியான ஏழை. ஒவ்வொரு விதமான ஏழைக்கென, உடல்மொழியையே உடையாக மனதில் தைத்துப் போட்டுக்கொள்ளும் மகாகலைஞன். பணக்காரன் என்றால், கர்வமான பணக்காரனா, குடிகார பணக்காரனா, அன்பான பணக்காரனா... அதற்குத் தகுந்தமாதிரி, சிவாஜி எனும் ஐந்தடி உயரக்காரர், ஆள்மாற்றுகிற ரசவாதமெல்லாம் இந்தியதுணைகண்டம் வரை தேடினாலும் கிடைக்காதது! பார்மகளே பார் படத்திலும் பணக்கார சிவாஜிதான். உயர்ந்த மனிதனிலும் அப்படித்தான். வசந்தமாளிகையிலும் ஒருவித பணக்காரர்தான். அவன்தான் மனிதன் பணக்காரனும் வேறுவகைதான். ஆனால், ஒரு பணக்காரக் கேரக்டரை இன்னொரு பணக்காரத்தனத்துக்குள் புகுத்தமாட்டார் என்பதுதான், சிவாஜியின் தனி ஸ்டைல். எந்நேரமும் போதையில் இருப்பது மாதிரியே இருப்பார், வசந்தமாளிகையில். எப்போதும் அன்பு கலந்த அப்பாவித்தனத்துடன் இருப்பார் படிக்காத மேதை ரங்கன். உள்ளம் என்பது ஆமைக்கு ஒருவிதமாக நடப்பார். ஆறுமனமே ஆறு பாடலுக்கு வேறுவிதமாக நடப்பார். மாதவிப் பொன்மயிலாள் பாட்டுக்கு தனி ராஜநடை. திருவிளையாடலில் கடற்கரையில் நடக்கும் போது அதுவொரு ஸ்பெஷல் நடை. தெய்வமகனில் மாடிப்படி ஏறுவார். திரிசூலத்திலும் மாடிப்படி ஏறுவார். அங்கே ஒருவிதம்..!இங்கே ஒரு ஸ்டைல் நடை. இப்படி தமிழ் சினிமாவில், இவரின் நடை, பார்வை, பேச்சு, உடல்மொழி என்று எத்தனையெத்தனை ஸ்டைல்கள். நடிப்பில் மட்டுமல்ல...!சிவாஜியின் நடையைக் கூட மிஞ்ச எவருமில்லை. பச்சை விளக்கு அண்ணன், பாசமலர் அண்ணன், அன்புக்கரங்கள் அண்ணன், அண்ணன் ஒருகோவில் அண்ணன், நான் வாழ வைப்பேன் அண்ணன். ஆனால் அண்ணன் எனும் கேரக்டரும் சிவாஜியும்தான் ஒன்று. ஆனால் ஒவ்வொருவிதமான அண்ணன்களைக் காணலாம் அங்கே. அப்படியான மாற்றங்களைச் செய்ய, இனி நூறு சிவாஜி பிறந்தால்தான் உண்டு. பீம்சிங் சிவாஜியை ரசித்த காதலன். இவரின் பா வரிசைப் படங்கள் ஒவ்வொன்றிலும் அடிதூள்கிளப்பியிருப்பார். பி.ஆர்.பந்துலு வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மனையே பிழைக்கவைத்து, சிவாஜி வழியே உலவவிட்டவர். வ.உ.சியை, பாரதியை, பகத்சிங்கை, கொடிகாத்த குமரனை அவ்வளவு ஏன்... சாட்ஷாத் சிவபெருமானையே நம் கண்ணுக்கு முன்னே நிறுத்தி, நடிப்பின் மூலம் சந்தோஷ, உற்சாக வரங்களைத் தந்த உன்னதக் கலைஞன் சிவாஜிகணேசன். சினிமாவை, காமெடிப் படம் என்று பிரிக்கலாம். குடும்பப்படம் என்றும் காதல் படம் என்றும் ராஜா காலத்துப் படம் என்றும் புராணப் படம் என்றும் பழிவாங்கும் படம் என்றும் பாசத்தை உணர்த்தும் படம் என்றும் பிரிக்கலாம். இந்தப் பிரிவுகள் அனைத்திலும் சிவாஜி நடித்திருக்கிறார். அவர் நடித்ததாலேயே அது சிவாஜிபடமாயிற்று! பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன், பி.மாதவன், டி.யோகானந்த் என்று சிவாஜியை திரையில் விளையாடவிட்டு, ரசித்த இயக்குநர்கள் பட்டியல் ஏராளம். அவரின் அதகளமும் ஆட்டமும் கண்டு பிரமித்துப் போனவர்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள்! நாகஸ்வரக் கலைஞனாகவும் நடிப்பார். மிருதங்க வித்வானாகவும் பொளந்துகட்டுவார். எப்படி வாசிக்கவேண்டும் என்பதை பியானோ ஸ்பெஷலிஸ்ட், இவரின் புதியபறவை பார்த்துதான் வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாரோ என்று தோன்றும். முதல்மரியாதை சிவாஜியும் தேவர்மகன் சிவாஜியும் வேற லெவல். வேற ரகம். சிவாஜி, வரம் பெற்ற கலைஞன். சாகா வரம் பெற்ற கலைஞன். நெஞ்சிருக்கும் வரை... ! அவரின் நினைவிருக்கும்...! அடுத்தடுத்த தலைமுறையிலும் தவப்புதல்வனெனத் திகழ்வான் தன்னிகரில்லா கலைஞன்..!


ஐயாவின் புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும்!!! நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...!

Recent Posts

See All

13 May-28 May

(13-மே) பக்ருதின் அலி அகமது 👉 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 👉 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய த

(24 ஏப்ரல் - 30 ஏப்ரல்)

(24-ஏப்) *உலக ஆய்வக விலங்குகள் தினம்* உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் து

bottom of page